Wednesday, June 30, 2010

வாரிசு - அப்டேட்ஸ் - ஜூன் 2010

இப்போதெல்லாம் மகன் போனில் நிறைய பேச ஆரம்பித்து விட்டான்.. இப்போது தான் அவன் பேசும் ஸ்லாங் புரிய ஆரம்பித்து இருக்கின்றது. இரட்டைக் குடியுரிமை போல இரட்டை கலாச்சாரம் அவனிடம் இருக்கும் என்று தெரிகின்றது. எங்கள் வீட்டில் மதுரை தமிழ் என்றால், மனைவியின் வீட்டில் நாஞ்சில் தமிழ்.. இவனுக்கு ரெண்டும் கலந்து வருகின்றது. திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தைகள் புரியாமல் திண்டாடி இருந்திருக்கின்றேன். இப்போது மகனிடமும் திண்டாட வேண்டி வருகின்றது.. ;-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இப்போது படிப்பது LKG. இந்த மாத ஆரம்பத்தில் தான் பள்ளி செல்ல ஆரம்பித்தான். பள்ளி ஆரம்பிக்கும் போதே சொல்லி இருந்தேன்.. அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்.. நம்ம பேச்சுக்கு ஏதும் மதிப்பு இல்லை அவனது பள்ளி ஆசிரியையிடம்.. அவர்களது பாடத்திட்டம்படி தான் நடக்க வேண்டுமாம்.

@ பூக்களின் பெயர்களை வாசிக்க கற்றுக் கொள்ளச் சொல்லி இருக்கின்றார்கள்.. அதில் சில என்னவென்றே எனக்கும் வீட்டுக்காரம்மாவுக்கும் தெரியவில்லை. இங்கிருந்து இணையத்தில் பார்த்து அவர்களுக்கு விவரிக்க வேண்டி இருந்தது.. அதில் சில மலர்கள்
dahlia
daisy
periwinkle

@ திருக்குறள் இந்த ஆண்டு 25 கற்றுக் கொள்ள வேண்டுமாம்.. நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்கு 10 குறள் தான் மனப்பாடம் செய்வோம். இது வரை 4 குறள்களை மனப்பாடம் செய்துள்ளான். அகர முதல் எழுத்தெல்லாம், கற்க கசடற, எல்லா விளக்கும் விளக்கல்ல, மலர்மிசை ஏகினான் என்று செல்கின்றது. மலர்மிசை ஏகினான் சொல்வதைக் கேட்கும் போது இனிமையாக இருந்தது.

மலர்மிசை ஏகினாஆஆஆஆஆன்
மாஆஆஆணடி சேர்ந்தார்ர்ர்ர்
நிலமிசை நீஇஇஇடு
வாழ்வார்ர்ர்ர்ர்

@ போன் செய்யும் போது அங்கே சத்தம் என்னவென்றால் 123 எழுதுவதில் தகராறு என்று.. 1,2,3 எழுதுவது சுலபம் தானே என்ற போது.. அது 123 இல்லையாம்.. one, two, three யாம்... இந்த சின்ன வயசில் இவ்ளோ சுமையா.. நாங்கள் எல்லாம் மூன்றாம் வகுப்பில் தான் ABCD படித்தோம்.. ஏனோ மனம் குழம்பி விட்டது. இன்றைய அவசர உலகில் அவனையும் திணிக்கின்றோமோ என்று.. சாவகாசமாக கற்றுக் கொள்ளட்டும் என்று விடலாமா என்று கூட எண்ணம்.. ஆனால் இன்றைய கடின யுகத்தில் பிந்தங்கி விடுவானோ என்ற பயமும்... ஊருக்கு சென்று தான் நிலைமையைப் பார்க்க வேண்டும்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மகளுக்கும், மகனுக்கும் சில நேரங்களில் போராட்டம்... இவன் படிக்கும்\எழுதும் போது அவளும் கலந்து கொள்கின்றாள்.. எதற்கு? அவனது புத்தகங்களைக் கிழிக்க... ஆனாலும் அவளிடம் இவன் அடிவாங்குவது தான் அதிகமாம். # தங்கை பாசம்.. ;-)



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

போனில் உரையாடலில் வரிசையாக எதை எல்லாம் வாங்கி வர வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான்.

”சாக்லேட்”
“ம் அப்புறம்”
“ஜெல்லி மிட்டாய்”
“ம் அப்புறம்”
வீடியோ கேம்ஸ்”
“ம் அப்புறம்”
“டிவி”
....

இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தது.. இறுதியில் “
நீங்க நான் சொன்னதை எல்லாம் மறந்துடுவீங்க... அதனால எல்லாத்தையும் எழுதி வச்சுக்கங்க... ”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


“.. எப்ப வருவீங்க?”

“சீக்கிரமே வந்து விடுவேன்”
“சீக்கிரம்னா எப்ப?”
“இன்னும் மூணு மாசம் தான்... அதுக்கு அப்புறம் ஊரிலேயே உங்க கூட இருப்பேன்”
“நீங்க இப்படித் தான் ரொம்ப நாளா சொல்றீங்க.. வரவே மாட்றீங்க... சீக்கிரம் வாங்கத்தா”

...................................



Monday, June 28, 2010

செம்மொழி மாநாட்டை அடுத்து - கலைஞருக்குக் கடிதம்

தொழில் நகரமான கோவையில் செம்மொழி மாநாடு சிறப்புடன் முடிந்து இருக்கின்றது. சில விஷயங்களில் இது வெற்றி தோல்வி என நிர்ணயித்துக் கூறும் நுட்பம் உள் நுழைய இயலாது... அது போல தான் இந்த மாநாடும்... இது ஒன்றும் பணம் போட்டு பணம் பார்க்கும் திரைப்படம் அல்ல... இது ஒரு சமூகத்தின், தொன்று தொட்டு வந்த சமூகவியலில் கொண்டாட்டம்.. இதன் மூலம் நம்மால் முடிந்த நன்மைகளை அடைந்து கொள்வது மட்டுமே நமக்கான நோக்கம்..

உலகம் தோன்றிய காலம் தொட்டே எது நடந்தாலும் அது நல்லதோ, கெட்டதோ அதை எதிர்க்க ஒரு கும்பல் கிளம்புவது சகஜமே.. கெட்டவைகளை எதிர்க்கும் கும்பல் அதில் கிடைத்த சொரிதலின் இன்பம் காரணமாக நல்லவைகளையும் எதிர்க்கும். சாக்ரடிஸ் முதல் கலிலியோ வரை அவர்கள் வாழ்ந்த சமூகத்தால் ஏளனமாக பார்க்கப்பட்டனர். கிறிஸ்து தன் மக்களாலேயே சிலுவையில் அறையப்பட்டார். முகமது(ஸல்) நபி தன் சொந்த ஊரில் இருந்து சொந்த உறவுகளாலேயே விரட்டப்பட்டார்... இவை போன்றவை எல்லாம் வரலாறு நமக்கு தரும் பாடங்கள்.

செம்மொழி மாநாடு செங்குருதியின் மீது நடாத்தப்பட்ட மாநாடாக அறிவுக் கொழுந்துகள் எழுதும் போது சிரிப்பு தான் வருகின்றது. செங்குருதியின் ஓட்டம் இப்போது தான் நின்றுள்ளது. வெறிச்சோடிப் போய் கிடந்த பாதைகளில் வாகனங்கள் உருள்கின்றன. ஏசி அறையில் ஐரோப்பாவிலும், கனடாவிலும் அமர்ந்து பிஸ்ஸாக்களை மென்று கொண்டே எழுதும் இவர்களுக்கு இனி உசுப்பேத்தி விட ஆள் இல்லாததால் வந்த கோபமாக இருக்கும் போல் இருக்கின்றது.. வாழ்க ஜனநாயகம்

இவர்களுக்கு வால் பிடிக்க என்றே ஒரு காக்கைக் கூட்டம் இருக்கின்றது. தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து வருடங்களுக்கு எந்த திருமணமோ, நல்ல காரியமோ நடக்கக் கூடாது என்று சட்டம் இயற்றினால் கூட “ஏன் ஐந்து ஆண்டு, இன்னும் பத்து ஆண்டுகளுக்கு என்று சட்டத்தை மாற்றுங்கள்” என்று கூட இவர்கள் கூக்குரல் எழுப்புவார்கள்.. ஏனெனில் இவர்கள் தான் பன்னெடுங்காலமாக தமிழையும், தமிழினத்தையும் தங்கள் சிரங்களில் ஏந்தி
வளர்த்தவர்கள். இவர்களுக்கு தமிழினம் செத்துக் கொண்டே இருப்பது தான் பிடிக்குமாம்.





இதோ செம்மொழி மாநாடு முடிந்து விட்டது.. இனி இவர்களின் வாய்க்கு அவல் கிடைக்காமல் திண்டாடுவார்கள்.. கலைஞரைப் பற்றி பேச அல்லது எழுத ‘மேட்டர்’ கிடைக்காமல் திண்டாடுவார்கள். எனவே கலைஞர் அவர்களே... உடனடியாக இவர்களின் வாய்க்கு ஏதாவது கொடுங்கள். அவர்களுக்கு உங்களை திட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.. இல்லையெனில் எதையாவது சுவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தகுந்தாற் போல் ஏதாவது செய்யுங்கள்.


புகைப்படங்களுக்கு நன்றி : தினமலர்

Thursday, June 17, 2010

ராவணன்

ராவணன் - ரொம்ப எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம்... கதைக்காக மணிரத்னம் ரொம்ப மெனக்கெடவில்லை... ராமாயணத்தின் கதை தான்.... ராமன் (?) = பிருத்விராஜ், ராவணன்(?) = விக்ரம், சீதை(?) = ஐஸ்வர்யா, அனுமார்(?) = கார்த்திக், இப்படியும் எடுத்துக்கலாம்.

காவல்துறை உயர் அதிகாரியான பிருத்விராஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துவதுடன் படம் தொடங்குகின்றது.. அதில் நனைய ஆரம்பித்த ஐஸ் அதற்கு அடுத்து படம் முழுவதும் நீரில் நனைந்து கொண்டே இருக்கின்றார்... மணிரத்னத்தின் இருட்டுக்குப் பதில் மழை இந்த படத்தில்.

ஏன் ஐஸ்வர்யாவை விக்ரம் கடத்த வேண்டும்.... அதே ராமாயணக் கதைப் படி தங்கை(சூர்ப்பனகை = பிரியாமணி)க்கு ஏற்ப்பட்ட களங்கத்துக்கு பழிவாங்க... ஐஸைக் கடத்திய விக்ரமுக்கு ஐஸ் மீது ஒரு ஈர்ப்பு உருவாக.. கடைசியில் ஐஸை விடுவிக்கிறார் விக்ரம்.. விடுதலையான ஐஸின் நடத்தைக் குறித்து பிருத்விராஜ் சந்தேகம் எழுப்ப ஐஸ் கணவனைப் பிரிந்து விக்ரமைத் தேடி வருகின்றார்.... இறுதியில் என்ன நடந்தது என்பதே டிவிஸ்ட்.

படத்தின் கதை ஓட்டம் குறித்து முன்பே அனுமானிக்க முடிந்து இருப்பதால் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் படம் ஆரம்பிக்கின்றது.. ஜெட் வேகம்.. படம் போவதே தெரியவில்லை. நல்ல இயக்கம். ( ஒருவேளை எங்க கல்ஃப் சினிமா ஆப்ரேட்டர் ‘கை’ தேர்ந்தவரோ? படம் 2 மணி நேரத்தில் முடிந்ததால் டவுட்டு.. ;-) )..

படம் முழுவதும் காட்டில் தான்.. அழகான இடங்கள்.. நல்ல ஒளிப்பதிவு. கண்ணுக்குள் குளுமை நிற்கின்றது.. காட்சிகளில் வன்முறைக் காட்சிகள் மிகக் குறைவே.. நீர்வீழ்ச்சி காட்சிகள், பாலத்தில் கடைசி சண்டைக் காட்சி, மலை உச்சி பிரமிக்க வைக்கின்றது.

விக்ரம்.. இது போல் நரம்பு புடைக்க கத்தி நடிப்பதை பல படங்களில் பார்த்தாச்சு.. அவரே சொன்னது போல் பல படங்களில் அவர் நடித்ததின் கலவை.. ஆனாலும் நிறைய உழைத்து இருக்கின்றார்.

பிருத்விராஜ்.. போலிஸ் அதிகாரி... குழந்தைத் தனமான முகத்தில் இதுவரைப் பார்த்து வந்த நமக்கு இந்த கடுமை புதுசு.. எல்லாரும் இவரை இந்த வேடத்தில் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை.

கார்த்திக் காமெடியாக ஆரம்பித்தாலும் நல்லவேலையாக காமெடி ரோல் செய்யவில்லை. சிம்பிளாக கலக்குகின்றார். பிரியாமணி அதே கிராமத்து கில்லி... வழக்கம் போல் வண்புணர்வு செய்யப்படுகின்றார்.

பிரபு குண்டாக வருகின்றார்.. ஆரம்ப பில்டப்புகள் மட்டுமே.. ரஞ்சிதா சீனுக்கு வந்ததுமே ஒரே சத்தம் தியேட்டரில்.. அதுக்கு அப்புறம் வேலையே இல்லை... வையாபுரி பெண் வேடத்தில்... ம்ஹூம்.



சொல்ல வேண்டியவர்கள் இன்னும் இருவர்.. ஒன்று ஐஸ்வர்யா... இத்தனை வயசாகி(?)யும் இன்னும் மிரட்டுகின்றார்.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போள் இருக்கின்றது.. இரண்டே இரண்டு காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகளில் மேக்கப் இல்லாதது போல் தோற்றம்... காட்டில் கஷ்டப்பட்டும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்... இப்போது தான் முதன் முறைய தியேட்டரில் ஐஸைப் பார்ப்பதால் வந்த பிரமிப்பாக இருக்கலாம்.. ஐஸ்வர்யாவிற்கு முன்னால் விக்ரம், பிருத்விராஜ் இருவருக்குமே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி எதும் வேலை செய்யவில்லை.. ஐஸ் இஸ் கிரேட்.

இரண்டாவது ஏஆர் ரஹ்மான்... இப்போதெல்லாம் நிறைய மலையாள படங்கள் பார்க்கும் வழக்கம் ஆகி விட்டதால், தமிழ் பட அதிரடி பிண்ணனி இசை பயமாகி விட்டது. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு படத்தை பார்க்கத் துவங்கினேன். சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டேன்.. இதமான பிண்ணனி இசை.. எந்த கர்ண் கொடூரமும் இல்லை.. விக்ரமின் சத்தம் தவிர

உசிரே பாடல் என்னை ரொம்ப கவர்ந்தது... ஆனால் அழகான அந்த பாடல் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டும் கொஞ்சம் உறுத்தியது. மற்ற பாடல்களும் ரசிக்கலாம்.. கெடா கறி பாட்டு கலக்கல். எந்த பாட்டுக்கும் யாரும் எழுந்து வெளியே செல்லவில்லை.

விக்ரம் ஏமாற்றினாலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்... பிருத்வி வேடத்தில் விக்ரம்... அதில் எப்படி இருக்கின்றது எனக் காண ஆவல்.. விக்ரமை அபிஷேக் முந்தி இருப்பார் என்று நினைக்கின்றேன்.

டிஸ்கி : 1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் என்ற பெருமை இந்த படம் தட்டிச் செல்கின்றது.. வரலாறு முக்கியம் அமைச்சரே... கூட வந்தவர் டிவிட்டர்களின் ஆசான் ஆயில்யன் அவர்கள்.

பின் டிஸ்கி : ராம்ஜி யாஹூ என்ற பின்னூட்ட பிதாமகர் மட்டும் இந்த பதிவு குறித்து இங்கு கமெண்ட் போட்டால் அவருக்கு நோபல் பரிசு வாங்கித் தர ஏற்பாடு செய்யப்படும். அதோடு என்னோடு கெட்டிச் சட்னியும், செட் தோசையும் சாப்பிடும் அரும் பெரும் பாக்கியமும் வழங்கப்படும்.